செய்திகள்
தளவாய்புரம் அருகே நெல் மூடை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
தளவாய்புரம் அருகே நெல் மூடை ஏற்றி வந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதி கவிழ்ந்தது.
தளவாய்புரம்:
தர்மபுரி மாவட்டம் சித்தண்ட ஹள்ளி பகுதியை சேர்ந்த அருள் (வயது28) என்பவர் லாரியில் நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை தளவாய்புரத்தில் உள்ள அரிசி அரவை மில்லுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கொல்லங்கொண்டான் விலக்கு அருகே வந்த போது லாரி திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சேதமடைந்தது.
உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், மின்சார வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மின்சார வாரியத்தினர் இந்த பகுதியில் உடனே மின்சாரத்தை தடை செய்தனர்.
பின்னர் ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை சரி செய்தனர். மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து கவிழ்ந்த லாரியில் உள்ள மூடைகள் மற்றொரு லாரியின் மூலம் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் மாற்றப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.