செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-10 20:28 GMT   |   Update On 2020-12-10 20:28 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது ரபி (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமைகளை வைத்து தள்ளியபடி வந்த டிராலியில் கைப்பைக்கு அடியில் மர்ம பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர்.

அதை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையைச்சேர்ந்த அப்துல் கரீம் (35) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 170 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News