செய்திகள்
கைது

பெண் மரணத்தில் திடீர் திருப்பம்- தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது

Published On 2020-12-06 03:41 GMT   |   Update On 2020-12-06 03:41 GMT
பெரும்பாக்கத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் பாரதி (வயது 24). இவர், காதல் தோல்வியால் 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பாரதியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு செல்போன் செயலி ஒன்றில் பாடல் பாடுவதில் விருதுநகரைச் சேர்ந்த முத்துகுமரேசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

நாக்பூரில் ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் முத்துகுமரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இதையறிந்த பாரதி அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2-ந் தேதி பாரதியுடன் முத்துகுமரேசன் வீடியோ கால் மூலம் பேசியபோது இது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாரதி, தான் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

உடனே முத்துகுமரேசன், அதற்கு பதிலாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என கூறியதாக தெரிகிறது. இதனால் வீடியோ காலில் முத்துகுமரேசன் முன்னிலையிலேயே பாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் முத்துகுமரேசனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News