செய்திகள்
கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்
கடலூரில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
அடுத்தடுத்த புயல்களால் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகள், தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் கடலூர் வந்தார். முதலில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பரதம்பட்டு கிராமத்திற்கு சென்று அங்கு பாதிப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின்னர் அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக, விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.