செய்திகள்
உயிரிழப்பு

பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்பு

Published On 2020-12-05 03:04 GMT   |   Update On 2020-12-05 03:04 GMT
காஞ்சிபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தும்பவனம், வெள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது அக்காள் மகள் பூரணி (17). இவரது தோழிகள் அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ (15), சுபஸ்ரீ (14) மற்றும் மீனாட்சி (9). இவர்கள் 5 பேரும் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் குளிக்க சென்றனர்.

குளித்து முடித்தபிறகு தாமோதரன் மீனாட்சியை அழைத்து கொண்டு பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீர் வழியாகவே பாலாற்றை நடந்து கடக்க முயன்றனர். தாமோதரன் திரும்பி பார்த்தபோது பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று மாயமான 3 சிறுமிகளை தேடினர்.

இந்த நிலையில் மாயமான பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோரின் உடல்கள் நேற்று அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சிறுமிகளின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Tags:    

Similar News