செய்திகள்
தேங்கிய மழைநீரில் செல்லும் பேருந்துகள்

வெள்ளக்காடான கடலூர் நகர் பகுதி

Published On 2020-12-04 12:03 GMT   |   Update On 2020-12-04 12:03 GMT
புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
கடலூர்:

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்த காரணத்தினால் கடலூர் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.

குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், புதுப்பாளையம் ,திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், சுனாமி நகர், சான்றோர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், கடலூர் பாலூர் சாலை மற்றும் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளம் போல் காட்சி அளித்து முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் மழைநீர்சூழ்ந்து குளம் போல் காட்சி தருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் நகராட்சியில் இன்று காலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ள அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News