செய்திகள்
கலெக்டர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

பையனப்பள்ளி ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி திட்டத்திற்கான வளம் செயலி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2020-12-01 03:47 GMT   |   Update On 2020-12-01 03:47 GMT
பையனப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான ‘வளம்’ செயலியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான ‘வளம்’ செயலியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், தாசில்தார் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர் அம்சாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அமீர்ஜான், வட்டார அணி தலைவர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் வட்டாரத்தில் 36 ஊராட்சிகளிலும், காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் 36 ஊராட்சிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 30 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை அடையாளம் கண்டு அவர்களே திட்டம் தீட்டலாம்.

கிராமத்தில் உள்ள பிரச்சினைகள், எந்த இடத்தில் முதலீடு ஈட்ட வேண்டும் என பொதுமக்களே முடிவு செய்து மாவட்ட அளவில் நிதி திரட்டி செய்ய முடியும். மகளிர் சுய உதவிக்குழு மூலமாக இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சமுதாய வல்லுனர்கள் மற்றும் கிராமப்புற பிரதிநிதிகளால் இதற்காக ‘வளம்’ செல்போன் செயலி மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும். கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வளர்ச்சியடைய இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News