செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சகிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மனைவி சத்யா என்ற சசிகலா (வயது 27). கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் நாகேந்திரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவின் 2 குழந்தைகளும் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சத்யா, தனது தாயுடன் தட்டக்கல் கிராமத்தில் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 குழந்தைகள் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த சத்யா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.