செய்திகள்
புதுவையில் வியாபாரியை தாக்கி பொருட்கள் சூறை- 3 பேர் கைது
புதுவை கவிக்குயில் நகரில் வியாபாரியை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவிக்குயில் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 55). இவரது மகன் ராமச்சந்திரன்(24). இரும்பு ஷீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். அந்த பொருட்களை தனது வீட்டின் அருகில் அடுக்கி வைத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரசாந்த் என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது இரும்பு ஷீட் காணாமல் போனால் உன் மீது போலீசில் புகார் செய்வேன் என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசனின் மகன் ராமச்சந்திரன், பிரசாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனே பிரசாந்த் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமச்சந்திரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அவரது கூட்டாளிகளான சீனு, ஸ்டீபன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.