செய்திகள்
வழக்கு பதிவு

தனிநபர் கழிப்பறை கட்டுவதில் ரூ.25 லட்சம் முறைகேடு- அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு

Published On 2020-11-27 09:04 IST   |   Update On 2020-11-27 09:04:00 IST
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதில் ரூ.25 லட்சம் முறைகேடு ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி:

ஊரக பகுதிகளில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மூலம் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற ஊரக பகுதிகளில் தனி நபர் கழிப்பறைகள் அமைக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்குள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடநாடு, எப்பநாடு, தும்மனட்டி, நஞ்சநாடு, தொட்டபெட்டா உள்பட 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்ட மானியம் வழங்கப்பட்டது.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய நாகராஜ் (வயது 50), நஞ்சநாடு, கூக்கல், எப்பநாடு உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் தனி நபர் கழிப்பறை கட்டப்பட்டதாக கணக்கு காண்பித்து ரூ.25 லட்சத்துக்கும் மேல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கழிப்பறை கட்ட மக்களுக்கு மானியம் வழங்கியது போல் கணக்கு காட்டி, அந்த பணத்தை மற்றொருவர் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பதும் தெரியவந்து உள்ளது.

முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நாகராஜ், தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் உதவி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி கூறும்போது, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்த நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Similar News