செய்திகள்
தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
ஊட்டி:
இ-பாஸ் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நீலகிரியில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டம் காரணமாக கொரோனா பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு ஊட்டியில் இருந்து மஞ்சூர், கோவை, மாயார், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பஸ்களில் இருந்த பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பயணிகளின் பெயர், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.