செய்திகள்
குன்னூரில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பரபரப்பு
குன்னூரில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூர்:
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டில் காட்டெருமை, காட்டுயானை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இது மட்டுமின்றி பலாப்பழ சீசன் மற்றும் பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் போது நீலகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள சமவெளிப்பகுதியிலிருந்து யானைகள் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிக்கு வருவது உண்டு.
இந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக பசுந்தீவனம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இதில் ஒற்றை யானை ஒன்று கே.என்.ஆர். பகுதியில் சுற்றி திரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், கே.என்.ஆர்.நகரில் சுற்றித்திரியும் ஒற்றை யானை பர்லியார் காட்டில் உள்ளதாகும். அது பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக சாலையை கடந்து வருகிறது.இந்த யானை யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. இருப்பினும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.