செய்திகள்
விவசாயியை தாக்கியதாக தம்பதி உள்பட 6 பேர் கைது
உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கியதாக தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி(வயது 59). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தமிழரசன்(35) என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆசைதம்பி அவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆட்களை வைத்து நிலத்தை சீர் செய்து கொண்டிருந்தார். இதனை அறிந்த தமிழரசன், அவரது உறவினர்கள் நடராஜன்(32), இவருடைய மனைவி இந்துமதி(32), மற்றொரு நடராஜன்(35), இளவரசன்(32), பரமசிவம்(28) ஆகிய 6 பேரும் சேர்ந்து ஆசைதம்பியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஆசைதம்பி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.