செய்திகள்
ரேலியா அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேறும் காட்சி.

ரேலியா அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-11-23 09:21 IST   |   Update On 2020-11-23 09:21:00 IST
குன்னூரில் உள்ள ரேலியா அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குன்னூர்:

குன்னூர் அருகே பந்துமி என்ற வனப்பகுதியில் ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 43.7 அடி ஆகும். இந்த அணையில் இருந்து குன்னூர் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணை நிரம்பியது. எனவே அணையின் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த தண்ணீர் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியில் உள்ள ஜெகதளா பேரூராட்சியில் இருக்கும் தடுப்பணைக்கு செல்கிறது. அந்த தடுப்பணையும் நிரம்பியதால் அந்த தண்ணீர் ஆற்றில் கலந்து வீணாக செல்கிறது. பருவமழை பெய்யும்போது இந்த அணை உடனடியாக நிரம்புவதுடன், உபரிநீர் ஆற்றில் வீணாக செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உபரிநீர் ஆற்றில் கலந்து வீணாகுவதை தடுக்க தடுப்பணை அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, குன்னூரில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மழைக்காலத்தில் ரேலியா அணை நிரம்பிவிடுவதால் உபரிநீர் வீணாக ஆற்றில் செல்வதை தடுக்க தகுந்த இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குன்னூருக்கு குடிநீர் எடுத்தால் தட்டுப்பாடு நீங்கும். அதை அதிகாரிகள் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

Similar News