செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கொள்ளிடம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகை:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டு இருந்தாள். அதேபோல அதே பகுதியை சேர்ந்த 10 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் 4 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென சிறுவர்கள் 4 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஒரு வீட்டின் பின்புறத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.