செய்திகள்
கடலூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி
கடலூர் அருகே ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 45). இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இது பற்றி அறிந்த ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிசாமி, சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அரிசி, வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி விஜயராயலு, கிளைக் கழக செயலாளர்கள் மும்மூர்த்தி, விஜயகுமார், நிர்வாகிகள் முருகன், கந்தவேல், கோபி நாராயணன், விக்கி, பிரசன்னா, நீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.