செய்திகள்
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் பரத் (வயது 16). இவன் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவன் கிராமத்தில் நண்பர் களுடன் விளையாடி விட்டு கை, கால்களை கழுவுவதற்காக வீட்டின் அருகில் உள்ள இறால் குட்டைக்கு சென்றுள்ளான்.
இறால் குட்டையில் இறங்கி கை, கால்களை கழுவ முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக வழுக்கி குட்டைக்குள் விழுந்து விட்டான். அப்போது அங்கிருந்த மின்மோட்டாரில் அவனது கை பட்டது. இதில் மின்சாரம் அவனை தாக்கியது. இதனால் அவன்அபாய குரல் எழுப்பினான். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று அவனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி ராஜ்குமார் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.