செய்திகள்
கோப்புபடம்

நெய்வேலியில் காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை

Published On 2020-11-16 12:47 GMT   |   Update On 2020-11-16 12:47 GMT
நெய்வேலியில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி:

நெய்வேலி வட்டம் 21 நாவலர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 25). டிரைவரான இவரும் நெய்வேலி வட்டம் 4 சி.ஆர். காலனியை சேர்ந்த குமார் மகள் பவித்ரா (24) என்பவரும் காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் ஸ்டீபன்ராஜ் கடந்த சில மாதங்களாக பவித்ராவிடம் உனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரதட்சணை பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு ஸ்டீபன்ராஜ் கடந்த 7-ந்தேதி மாமனார் வீட்டுக்கு சென்று, பவித்ராவை சமாதானம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பவித்ரா மர்மமான முறையில் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தாய் கலைமணி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் எனது மகளின் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு, ஸ்டீபன்ராஜையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மமான முறையில் இறந்த பவித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News