செய்திகள்
கொலை

ஊத்தங்கரை அருகே கட்டிட தொழிலாளி கொலை

Published On 2020-11-13 13:29 IST   |   Update On 2020-11-13 13:29:00 IST
ஊத்தங்கரை அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள முக்காரம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் திருப்பதி (வயது 27). இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஊர்மிலா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. பின்னர் அவரது மனைவி ஊர்மிலா ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் தனியாக இருந்து வந்த திருப்பதி கட்டிட வேலைக்காக திருப்பூர், சேலம் போன்ற இடங்களில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், முக்காரம் பள்ளி பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நேற்று இரவு கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் திருப்பதி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சாமல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்த திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் நடத்தியதில் கள்ளத்தொடர்பு காரணமாக திருப்பதி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News