செய்திகள்
கோப்புபடம்

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் - வனத்துறையினர் அறிவுரை

Published On 2020-11-07 19:57 IST   |   Update On 2020-11-07 19:57:00 IST
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
கூடலூர்:

கூடலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை- மனித மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கூடலூர் கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி (வயது 58) என்பவரும், 2-ந் தேதி கூடலூர் அருகே குயிண்ட் பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அத்துடன் கூடலூர், ஓவேலி வனச்சரகங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள கோக்கால், காந்திநகர், குயின்ட், ஆத்தூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வனத்துறையினர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தேயிலை தோட்ட வேலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தனியாக நடந்து செல்ல வேண்டாம். ஒரு குழுவாக இணைந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவேண்டும்.

மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பின் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுப்பதுடன், பொதுமக்களை உஷார் படுத்த வேண்டும். இரவில் வீடுகளை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் காட்டு யானை களுக்கு மிகவும் பிடித்தமான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிடக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News