செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2020-11-07 15:39 IST   |   Update On 2020-11-07 15:39:00 IST
கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் செம்மண்டலம் புருஷோத்தமன்நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் செந்தமிழ் (வயது 16). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. 

இதை அவரது தாய் லட்சுமி பார்த்து கண்டித்து வந்தார். அதேபோல் சம்பவத்தன்றும் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போன் பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி அவரை கண்டித்து விட்டு ஆடு மேய்க்க சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த போது, செந்தமிழ் வாந்தி மயக்கத்துடன் இருந்தார். இதை பார்த்து அவரிடம் தாய் லட்சுமி விசாரித்த போது, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

உடன் அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி லட்சுமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News