செய்திகள்
சிறைபிடிக்கப்பட்ட லாரியை தாசில்தார் சந்திரசேகரன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்

மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்

Published On 2020-11-06 09:13 GMT   |   Update On 2020-11-06 09:13 GMT
மருதையாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி கிராமத்தில் மருதையாற்றங்கரையில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களே ஒன்றிணைந்து நேற்று அதிகாலை மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட்டு 2 லாரிகளை சிறை பிடித்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் லாரியை விட்டு விட்டு அதன் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கும், தாசில்தார் மற்றும் கோட்டாட்சியருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் கீழப்பழுவூர் போலீசாரிடம் லாரிகளை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News