செய்திகள்
திருமானூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி - வயலில் வேலை செய்தபோது பரிதாபம்
திருமானூர் அருகே வயலில் வேலை செய்த விவசாயி, மின்னல் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 63). விவசாயியான இவர், நேற்று மாலை ஆலம்பாடிமேட்டுத்தெரு செல்லும் சாலையில் உள்ள தனது வயலில் சம்பாநெல் சாகுபடிக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தங்கபாண்டியன் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.