செய்திகள்
ஈரோடு மாநகர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாநகர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வைராபாளையம் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஒரு சலவை தொழிற்சாலையின் மின் இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொழிற்சாலை, இரவு நேரத்தில் மாற்று மின் இணைப்பை பயன்படுத்தி இயக்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஈரோடு மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த தொழிற்சாலை மாற்று இணைப்பு மூலம் இயங்கியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பனங் காடு கிராமத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி திடக்கழிவினை இரவு நேரத்தில் லாரி மூலமாக எடுத்துச்சென்று கரூர் மாவட்டம் தென்னிலை கிராமம் அருகில் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திடக்கழிவினை சாலையோரத்தில் விதிகளுக்கு புறம்பாக கொட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரித்து உள்ளார்.