செய்திகள்
செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2020-11-04 23:49 IST   |   Update On 2020-11-04 23:49:00 IST
நெல்லிக்குப்பத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளையும் அந்நிறுவனம் செய்தது. அதன்படி அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று செல்போன் டவர் அமைப்பதற்காக அங்கு வந்தனர்.

இது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து, செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பணியையும் தடுத்து நிறுத்தினர். உடனே ஊழியர்கள், இந்த இடத்தில் தான் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். இதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உள்ளோம் என்றனர். அதற்கு பொதுமக்கள், கடலூர் கலெக்டர் அலுவலகம், நெல்லிக்குப்பம் நகராட்சி, மின்சார துறை அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்று உள்ளீர்களா?, அவ்வாறு அனுமதி பெற்றிருந்தால் அந்த ஆணையை காண்பிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் ஊழியர்களோ அதற்கான ஆணையை காண்பிக்காமல், இங்கேதான் டவர் அமைப்போம் என்று கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திலும் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழியர்கள், டவர் அமைக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News