செய்திகள்
ரெயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் பள்ளம்

ஈங்கூர் ரெயில்வே மேம்பாலத்தில் பள்ளங்கள்

Published On 2020-11-04 16:20 IST   |   Update On 2020-11-04 16:20:00 IST
ஈங்கூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டு உள்ள அபாய பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே பெருந்துறை செல்லும் வழியில் உள்ளது ஈங்கூர் ரயில்வே மேம்பாலம். இந்த பாலம் வழியாக பெங்களூரு, சேலம் உள்பட பல பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கும் என தினமும் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

கேரள மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் 4 வழிச்சாலை வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சென்னிமலை, காங்கேயம், பல்லடம், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்கிறது. அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இந்த வழியாக செல்கின்றன.

இதனால் இரவு, பகலாக இந்த பாலம் வழியாக வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மேம்பாலம் அகலமாக இல்லாமல் குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈங்கூர் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன. முன்னால் செல்லும் வாகனங்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைவது வாடிக்கையாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மேம்பாலம் வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து சென்று உள்ளனர்.

எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News