செய்திகள்
மரணம்

குடிபோதையில் நடந்து சென்ற மீன் வியாபாரி கீழே விழுந்து பலி

Published On 2020-11-04 16:10 IST   |   Update On 2020-11-04 16:10:00 IST
குடிபோதையில் நடந்து சென்ற மீன் வியாபாரி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:

அறச்சலூர் அருகே உள்ள பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சேகர் (வயது 43). இவர் வெள்ளோடு அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதியில் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வந்தார். உதவியாக அவருடைய தாய் கிட்டம்மாளும் வேலை செய்து வந்தார். சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சேகரும், அவரது தாய் கிட்டம்மாளும் வழக்கம்போல் கடையில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த சேகர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதற்காக கடையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் சேகரை தேடி கிட்டம்மாள் சென்றார். அப்போது வெள்ளோடு-ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் மூக்கில் ரத்த காயங்களுடன் ரோட்டோரம் சேகர் கிடந்துள்ளார். உடனே அவரை கிட்டம்மாள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News