செய்திகள்
கவுந்தப்பாடியில் விபத்தில் தந்தை-மகள் பலி
கவுந்தப்பாடி அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் கொமராசாமி (வயது 55). கட்டிட தொழிலாளி. அவருடைய மகள் பிரியா (வயது 24). இவர்கள் 2பேரும் நேற்று கவுந்தப்பாடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கொமராசாமி, பிரியா மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொமராசாமி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.