செய்திகள்
புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் கேமரா பொருத்திய போது எடுத்த படம்.

மசினகுடி அருகே பசு மாட்டை புலி அடித்து கொன்றது- கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

Published On 2020-11-03 15:54 IST   |   Update On 2020-11-03 15:54:00 IST
மசினகுடி அருகே பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதையடுத்து அங்கு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
கூடலூர்:

மசினகுடியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று புதருக்குள் இருந்து மறைந்து இருந்த புலி ஒன்று வெளியே வந்தது.

பின்னர் அந்த புலி அங்கு மேய்ந்து கொண்டு இருந்த பசுமாட்டை அடித்து கொன்றது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிங்கார வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் அவர்கள் புலி வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருக்கிறதா என்றும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், இங்கு புலி நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நாங்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 கேமராக்களை அங்கு பொருத்தி கண்காணித்து வருகிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்ட வேலுச்சாமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறும்போது, தனியார் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி கடித்து கொன்று விட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் எந்த வகையான வன விலங்கு பசு மாட்டை கொன்று இருக்கிறது என அறிவதற்காக 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிவாசி பெண் ஒருவரை புலி கடித்துக் கொன்றது. பின்னர் கோரிக்கைக்கு பிறகு வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் புலி நடமாட்டம் குறித்த தகவல் இல்லை. ஆதிவாசி பெண்ணை கொன்ற இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் தற்போது பசுமாட்டை புலி கொன்று விட்டது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News