செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் புல்வெளியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழும் காட்சி.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பூங்காக்களுக்கு 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

Published On 2020-11-02 23:58 IST   |   Update On 2020-11-02 23:58:00 IST
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நீலகிரி தோட்டக்கலை பூங்காக்களுக்கு இதுவரை 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
ஊட்டி:

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய பூங்காக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

வெளிமாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் இ-பாஸ் பெற்று வருகிறார்கள். பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பூங்காக்கள் திறக்கப்பட்டும் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கிறது. மேலும் இ-பாஸ் நடைமுறை தொடர்வதால் சமவெளி பகுதிகளில் இருந்து நடுத்தர மக்கள் ஊட்டிக்கு வந்து செல்ல தயங்குகின்றனர். இதனால் வார விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 1,358 பேர் வருகை தந்தனர். நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களுக்கு நேற்று ஒரே நாளில் 2,661 பேர் வருகை தந்து உள்ளனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பசுமையான புல்வெளியில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கண்ணாடி மாளிகை உள்பட பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நீலகிரியில் பூங்காக்கள் திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள் 19 ஆயிரம் பேர் வருகை தந்து இருக்கின்றனர். இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News