செய்திகள்
சிறுத்தை

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

Published On 2020-10-27 06:02 GMT   |   Update On 2020-10-27 06:02 GMT
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதனால் வனத்துறையினர், ‘திம்பம் வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல தடைவிதித்து உள்ளனர்’.

திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை, புலி நடமாட்டத்தை நேரில் பார்த்த சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சரக்கு வேன் சென்றது. திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை அங்கும், இங்குமாக நடமாடுவதை டிரைவர் பார்த்தார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் இதைப்பார்த்தனர். ஆனால் சரக்கு வேனில் சென்ற டிரைவர் சிறுத்தை ரோட்டோர தடுப்பு சுவரில் அங்குமிங்கும் நடமாடுவதை தனது செல்போனில் படம் பிடித்தார். சிறிது நேரம் கழித்து சிறுத்தை தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News