செய்திகள்
கார் தீப்பற்றி எரிந்த காட்சி.

திண்டுக்கல் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

Published On 2020-10-27 05:32 GMT   |   Update On 2020-10-27 05:32 GMT
திண்டுக்கல் அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் வில்பிரட்ஜோ. இவர், தனது மனைவி ஜைனி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். திண்டுக்கல் அருகே அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பகுதியில் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் காரின் முன்பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வில்பிரட்ஜோ அவசரமாக காரை நடுரோட்டில் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரும் இறங்கினார். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சிறிதுநேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News