செய்திகள்
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது வழக்கு
காவேரிப்பட்டணம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). இவர் கல்வித்துறையில் கடந்த 23.08.1999 அன்று பணியில் சேர்ந்தார். அப்போது அவர் போலி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் மிட்டஅள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது சான்றிதழ்களை கல்வி அதிகாரிகள் சரி பார்த்த போது அவை போலி சான்றிதழ்கள் என தெரிய வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.