செய்திகள்
கோப்புபடம்

மத்தூர், சாமல்பட்டி பகுதியில் 2 கல்லூரி மாணவிகள் கடத்தல் - பெற்றோர் போலீசில் புகார்

Published On 2020-10-22 11:54 GMT   |   Update On 2020-10-22 11:54 GMT
மத்தூர் மற்றும் சாமல்பட்டி பகுதியில் 2 கல்லூரி மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் லோகவாணி (வயது 23). இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் கல்பனா மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை, அதே கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வரும் வெலகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை(20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சாமல்பட்டி அடுத்த படவானூர்கேட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஊத்தங்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்துள்ள குமார்(23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News