செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்தது- உடல் கருகி வாலிபர் பலி
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் உடல் கருகி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னவாசல்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சுந்தரராஜ் (வயது 32). இவர், புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு, மீண்டும் திருப்பூர் செல்வதற்காக நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அன்னவாசல் அருகே உள்ள நல்லம்மாள்சத்திரம் என்னும் இடத்தில் இரு வாகனங்களும் எதிரெதிரே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.
இதில், லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர், லாரியின் முன் பகுதியிலும் தீப்பிடித்தது. உடனே, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுந்தரராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் வெட்டன்விடுதியை சேர்ந்த ராமஜெயம்(42) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.