செய்திகள்
விவசாயிகளிடம் காங்கிரசார் கையெழுத்து வாங்கியபோது எடுத்தபடம்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வயலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-14 14:07 GMT   |   Update On 2020-10-14 14:07 GMT
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வயலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மொடக்குறிச்சி அடுத்த நாத கவுண்டம்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றனர்.

இதுகுறித்து தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கூறும்போது, ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளிடம் கையெழுத்து வாங்க உள்ளோம். இந்த கையெழுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோரிடம் வழங்கப்படும். பின்னர் இந்த கையெழுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ரவி, மொடக்குறிச்சி வட்டார தலைவர் முத்துக்குமார், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News