செய்திகள்
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படியும், தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாகை அருகே நாகூர் கால் மாட்டு தெரு, யானை கட்டிமுடுக்குசந்து ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 33), நாகூரை அடுத்த தெத்தி சமரசம் நகரை சேர்ந்த அப்பாஸ் (44) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.74 ஆயிரத்து 900-ம், 10 லாட்டரி சீட்டுக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக யூசுப் மற்றும் அப்பாஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.