செய்திகள்
சிவசங்கரன்

வேதாரண்யம் அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-10-09 12:33 IST   |   Update On 2020-10-09 12:33:00 IST
வேதாரண்யம் அருகே கூலித்தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது 36). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள திரவுபதை அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சிவசங்கரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றியதில் சிவசங்கரனை அவரது நண்பர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிவசங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நேற்று அதிகாலை சிவசங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த காஞ்சிநாதனுக்கும், கொலை செய்யப்பட்ட சிவசங்கரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சிவசங்கரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த காஞ்சிநாதன், முருகையன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிவசங்கரனுக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Similar News