செய்திகள்
படப்பை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை
படப்பை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் காந்தி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு அருணா (28) என்ற மனைவியும், கணேஷ் (5), ஹேமந்த் (3) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சதீஷ்குமார் படப்பையில் இருந்து காவனூர் பகுதிக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக இடங்களை பார்த்து விட்டு மீண்டும் மாலை ஒரத்தூர் வழியாக படப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை ராமு (32) ஒட்டி வந்தார்.
அவர்களுடன் ஆறுமுகம் (42), ராஜா ஆகியோரும் காரில் வந்தனர். ஒரத்தூர் மேம்பாலத்தில் வரும்போது தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சதீஷ்குமாரின் காரை வழி மறித்து நிறுத்தினர்.
காரில் இருந்து சதீஷ்குமார் கீழே இறங்கினார். அப்போது மர்ம நபர்கள் உன்னிடம் பேச வேண்டும் வா என்று அழைத்தனர். மேம்பாலம் நடுவில் அழைத்து சென்றதும் கத்தி, அரிவாள் போன்றவற்றால் சதீஷ்குமரை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த சதீஷ்குமாருடன் வந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
கொலைக்கு தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.