செய்திகள்
ஆடுதுறை அருகே லாரியில் அடிபட்டு ஜவுளி வியாபாரி பலி
ஆடுதுறை அருகே லாரியில் அடிபட்டு ஜவுளி வியாபாரி தனது மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவிடைமருதூர்:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் திருச்சம்பள்ளி மேல தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது52). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று திருநாகேஸ்வரத்தில் உள்ள தனது பேத்தி வீட்டு விசேஷத்துக்கு மகன் சுரேஷ் (26) உடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
ஆடுதுறை அருகே சென்றபோது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கீழே விழுந்த பழனிவேல் மீது மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரியின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மகன் கண்ணெதிரிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சுரேஷின் கால் எலும்பு முறிந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.