செய்திகள்
புதுக்கோட்டை கீழராஜவீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 16 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டையில் கீழராஜவீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 16 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கீழராஜ வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதிக்கு பொருட்கள் வாங்க மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் நேற்று இரவு கீழ இரண்டாம் வீதியை சேர்ந்த உண்ணாமலை என்ற பெண் கீழ ராஜ வீதியில் மனோன்மணி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென உண்ணாமலை கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவரிடம் விசாரித்தனர். மேலும் கடைவீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடைகளில் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களின் அடையாளம் மற்றும் வாகனம் அதில் பதிவாகி இருந்தது. அந்த வாகனத்தின் அடையாளத்தை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.