செய்திகள்
புகையிலை- பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
புகையிலை- பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகளில் கொரோனா நேரங்களில் சரியான முறையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை விற்பனை செய்து வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார். ஆய்வின்போது திருமானூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெஸ்டின் அமல்ராஜ் உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.