செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு

Published On 2020-10-03 10:37 GMT   |   Update On 2020-10-03 10:37 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை:

தமிழக சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 266 ஆக உயர்ந்தது. சிகிச்சையில் இருந்தவர்களில் 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 399 பேர் கொரோனா சிகிச்சையில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். தற்போது 726 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவரும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்ற 65 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 2 பேர் இறந்ததால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அரிமளம் ஒன்றியத்தில் செங்கீரை ஊராட்சி மேனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒன்றியத்தில் கடியாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 11 பேருக்கும், ராயவரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 16 பேருக்கும், அரிமளம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 22 பேருக்கும், கீழாநிலைக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 20 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களான ஆதனக்கோட்டையில் 21 வயது வாலிபருக்கும், கல்லுவிடுதியில் 15 வயது சிறுமிக்கும், ஸ்ரீநகரில் 54 வயது பெண்ணுக்கும், வாராப்பூரில் 66 வயது பாட்டிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 407 ஆகவும், சிகிச்சைகள் இருப்போர் எண்ணிக்கை 20 ஆகவும் உள்ளது. இதுவரை 379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News