செய்திகள்
நிஷா ஏஞ்சல் - டென்னி

மின் கசிவால் தீ விபத்து- புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் உயிரிழப்பு

Published On 2020-10-02 15:43 IST   |   Update On 2020-10-02 15:43:00 IST
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷா ஏஞ்சல் (வயது 30) , இவர் தனது கணவரை பிரிந்து தனது மகன் டென்னியுடன் (5) வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சிமெண்டு ஓடு போட்ட வீட்டில் உள் தாழ்பாள் போட்டபடி நிஷா ஏஞ்சல் தனது மகனுடன் இரும்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கட்டிலில் இருந்த மெத்தை எரிந்ததால் புகை மூட்டத்தில் மூச்சு திணறி நிஷா ஏஞ்சல் மற்றும் அவரது மகன் டென்னி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு மூச்சு திணறி இறந்து போன நிஷா ஏஞ்சல் மற்றும் அவரது மகன் டென்னி ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலே மின்கசிவு ஏற்பட்டு அதில் மூச்சுத்திணறி இருவரும் இறந்து போனார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Similar News