செய்திகள்
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் சம்பவத்தன்று தனது நண்பரை சேலம் செல்ல பஸ் ஏற்றி விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். பின்னர் மேற்கு பக்க நுழைவு வாயில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது நண்பரை பஸ் ஏற்றச்சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் டவுன் கிரைம் போலீசார் நேற்று ஈரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கருங்கல்பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 20) மற்றும் 19 வயது வாலிபர் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது முருகனின் மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவர், ஈரோடு மேட்டூர் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ் மற்றும் 19 வயது வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.