செய்திகள்
கோப்பு படம்

வேலூர் அருகே அதிமுக பிரமுகரை தாக்கி, மனைவியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2020-09-26 09:02 GMT   |   Update On 2020-09-26 09:02 GMT
வேலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரை தாக்கி, அவருடைய மனைவியிடம் செயினை பறித்துச்சென்ற முகமூடி கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த பொய்கை, சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 3 பேர் கொண்ட முகமூடி கும்பல், வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் முகமூடி கும்பல் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64). அ.தி.மு.க. பிரமுகர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம்கேட்டு மனோகரன் கதவை திறக்க சென்றார். அப்போது 3 பேர் கொண்ட முகமூடி கும்பல் மனோகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடைய மனைவி ராஜாமணி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்துச் சென்ற முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.

இந்தப்பகுதியில் தொடர்ந்து நகைபறிப்பு சம்பவம் நடப்பதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News