செய்திகள்
போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சாலைமறியல்

Published On 2020-09-25 15:10 IST   |   Update On 2020-09-25 15:10:00 IST
புதிய வேளாண் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாயிகள் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விளை நிலங்கள், சாதாரண மனிதர்களை பாதிக்கும் வகையிலும், இயற்கையை அழிக்கும்படி கொண்டு வரப்பட்டுள்ள சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்திஈரோடு மாவட்டத்தில் இன்று ஈரோடு, கோபி, கடம்பூர் ஆகிய 3 இடங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

ஈரோடு பஸ்நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர்கள் சி.எம்.துளசிமணி, ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர்.

கோபி பஸ் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பஸ் நிலையத்தில் மலைவாழ் மக்கள் மாநில குழு உறுப்பினர் சடையப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News