செய்திகள்
புதுக்கோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் வருகிற 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார்.
ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் விடுதலைக்கனல் (வடக்கு) , சசி கலைவேந்தன்(தெற்கு), முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் முகமது அஸ்ரப்அலி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில், அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.