செய்திகள்
கோப்புபடம்

வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை

Published On 2020-09-23 17:40 IST   |   Update On 2020-09-23 17:40:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லாவி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள மேட்டு சூளகரையைச் சேர்ந்தவர் முத்தரசு. இவரது மனைவி கல்பனா (வயது 23). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் முத்தரசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த கல்பனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனாவின் தந்தை முனுசாமி கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர் அருகே உள்ள திப்பாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது 43). திம்மராயப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மஞ்சுளா, உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து மஞ்சுளாவின் மகள் மாலா அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News