செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்தது

Published On 2020-09-22 02:01 GMT   |   Update On 2020-09-22 02:01 GMT
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 273 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கதிர்காமம் மாணிக்கசெட்டியார் நகரை சேர்ந்த 74 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் கல்யாணசுந்தர மூர்த்தி நகரை சேர்ந்த 58 வயது ஆண் ஆகியோர், ஜிப்மரில் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த 64 வயது முதியவர், திருக்கனூர் பழைய அஞ்சலக வீதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, நெல்லித்தோப்பை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் திருநள்ளாறு தெற்கு வீதியை சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் ஏனாமில் 75 வயது முதியவர் மற்றும் 57 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 107 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 514 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 23 ஆயிரத்து 191 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 ஆயிரத்து 659 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,667 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 992 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 18 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 467 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 398 பேர் புதுச்சேரி பகுதியையும், 31 பேர் காரைக்காலையும், 38 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்களாவர். புதுவையில் உயிரிழப்பு 2.01 சதவீதமாகவும், குணமடைவது 77.90 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News